articles

img

“தேசபக்தி”யின் பெயரால் வலதுசாரிகளின் நரவேட்டை - களப்பிரன்

“தேசபக்தி”யின் பெயரால் வலதுசாரிகளின் நரவேட்டை 

ஓர் இந்தோனேசிய அனுபவம்

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தா வில் தங்கியிருந்த இடத்திலிருந்து விமான நிலையத்திற்கு டாக்சியில் அதன் ஓட்டுநரோடு பேசிக்கொண்டு சென் றேன். அந்த ஓட்டுநருக்கு ஆங்கிலம் தெரியாது,  எனக்கு அவர்களின் மொழியான பாஷாவில் ஒரு சொல் கூடத் தெரியாது. எங்கள் இருவருக் கிடையில் கூகுள் மொழிபெயர்ப்பு செயலியை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மணி நேரம்  எந்தத் தடையுமின்றி உரையாடிக் கொண்டே பய ணித்தோம். (இங்கு மும்மொழிக் கொள்கை தேவை, இந்தி மொழி தெரிந்தால் தான் இந்தியா முழுவதும் போகலாம் என்று சிலர் புலம்பிக் கொண்டிருப்பது என் நினைவுக்கு வந்தது). பள்ளிப்படிப்பை தாண்டாத 24வயதான அந்த  இளைஞரிடம், அந்நாட்டு அரசியல் குறித்து நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவருக்குத் தெரிந்த அளவில் தயங்கித் தயங்கி விடை யளித்து வந்தார்.  

தேச பக்தியின் பெயரில் விதைத்த கம்யூனிச வெறுப்பு

அப்படி நான் கேட்ட கேள்விகளுள் ஒன்று “ஒரு காலத்தில் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி பெரிய கட்சி. தற்போது கம்யூனிசம் குறித்து  என்ன நினைக்கிறீர்கள்?” என்பதாகும். அதற்கு அவர் சட்டென “கம்யூனிசமா..? அது ஜன நாயக விரோதமானது. மனிதத் தன்மை யற்றது. அதை எங்கள் நாட்டில் நாங்கள் அனு மதிக்கவே மாட்டோம்” என்று திட்டவட்டமாகச் சொன்னார். இப்படி ஒரு பதிலை அமெரிக்கா வில் கூட நாம் கேட்டிருக்க மாட்டோம். ஆனால் நமக்கு அருகில் இருக்கும் நாடுகளில் ஒன்றான, இந்தியாவைப் போலவே பல வகையில் ஒத்துப்போகும் இந்தோனேசியாவில் இப்படி ஒரு கம்யூனிச வெறுப்பு இருப்பது நமக்குத் தெரி யுமா..? அதுவும் அந்த வெறுப்பை சில மாதங் களில் அங்கு இந்தோனேசியா முழுவதும் விதைத்தார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர் “தேசபக்தி.” உலகின் இயற்கை வளமிக்க நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. 17ஆயிரம் தீவுகளை கொண்ட அந்நாடு, ஒரு காலத்தில் இந்தியா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது போல், இந்தோனேசியா ஹாலந்தின் டச்சுக் காலனி யாக இருந்தது. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி என்று சொல்லப்படும் பிகேஐ(PKI) 1914ஆம் ஆண்டு காலனி ஆட்சியிலேயே அங்கு  தொடங்கப்பட்டுவிட்டது. இந்திய கம்யூனிஸ்டு கள் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றது போல், இந்தோனேசிய விடுதலைப் போராட்டத் தில் பிகேஐ (PKI) பங்கேற்றது. இந்தியாவில் நேரு தலைமையிலான அணிசேரா நாடாக இந்தியா இருந்ததைப் போல, அந்நாட்டில் சுகர்னோ தலைமையில் இந்தோனேசியா அணிசேரா நாடுகளில் ஒன்றாக இருந்தது. அதற்கு  அங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவாக இருந்தார்கள்.  

உலகின் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சி

இந்தோனேசிய விடுதலைக்குப் பிறகு அந்நாட்டில் உள்ள பெரும் தனியார் பன்னாட்டு நிறுவனங்களை தேசவுடைமையாக்கும் போராட்டங்களை அங்குள்ள செங்கொடி இயக்கம் தனது தொழிற்சங்கங்கள் மூலமாக செய்து அதில் கணிசமான வெற்றியும் பெற்றது. அதனால் ஏற்பட்ட மக்கள் ஆதரவால் 1955 தேர்தலிலேயே அரசியலமைப்பு சபையின் 514 இடங்களில் 80 இடங்களை கம்யூனிஸ்ட் கட்சி  வென்றது. கிழக்கு ஜாவா போன்ற பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 30 சதவிகித வாக்குகள் இருந்தன.  1965ஆம் ஆண்டு கணக்குப்படி சுமார் முப்பது லட்சம் உறுப்பினர்களுடன், பிகேஐ என்று சொல்லப்படும் இந்தோனேசிய கம்யூ னிஸ்ட் கட்சி, சீனா மற்றும் சோவியத் குடியரசு களுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக திகழ்ந்தது. அனைத்து இந்தோனேசிய தொழிலாளர் மத்திய அமைப்பு (செண்ட்ரல் ஆர்கனிசாசி புருஹ் செலுருஹ் இந்தோனேசியா), மக்கள் இளைஞர் (பெமுடா ரக்ஜத்), இந்தோனேசிய பெண்கள் இயக்கம் (கெரகான் வனிதா இந்தோனேசியா), இந்தோ னேசிய விவசாயிகள் முன்னணி (பாரிசன் டானி இந்தோனேசியா), மக்கள் கலாச்சார நிறுவனம் (லெம்பகா கெபுடாஜான் ரக்ஜத்), இந்தோனேசிய அறிஞர்கள் சங்கம் (ஹிம்புனான் சர்த்ஜானா இந்தோனேசியா) போன்று தொழிலாளி, விவ சாயி, இளைஞர், பெண்கள், அறிஞர்கள், பண்பாட்டு ஊழியர்கள் என்று எல்லா பிரிவு களுக்கும் பல்லாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட வெகுஜன அரங்கங்களின் மூலம் கட்சி ஆழமான அடித்தளத்தோடு இருந்தது.  அதன் உச்சமாக 1965 கணக்குப்படி ஐந்தில் ஒருவர் இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருந்தார். ரஷ்யா, சீனா,  கியூபா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வர வாய்ப்புள்ள நாடாக இந்தோனேசியா இருந்தது.  இவ்வாறு அந்நாட்டில் எளிய மக்களிடம் கலந்திருந்த கம்யூனிசம் இன்று அதே மக்க  ளால் வெறுக்கப்படும் தத்துவமாக மாறியது எவ்வாறு? 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் இந்தோனேசிய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆறு பேர், ஆயுதம் தாங்கிய ஒரு குழுவால் கடத்தி கொலை செய்யப்பட்டார்கள். உயர்மட்ட அதிகாரிகளில் பெரும்பாலானோர் மரணித்த சூழலில் அந்த ஆயுதம் தாங்கிய குழு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதாக அறிவித்தது. மக்களிடம் பெரும் செல்வாக்கில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி இது போன்ற சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடவேண்டிய எந்தத் தேவையும் இல்லை.  

திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் செய்த மூன்று அமைப்புகள்

இருந்த போதும் இந்த செயல்பாடுகளுக்கு இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என்று ஒரு சில நாட்களுக்குள் நாடு முழுவதும் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம்  மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தச் செயல்பாடுகளுக்கும் தங்களுக்கும் துளிகூட தொடர்பு இல்லை, இந்தச் செயலை ஆதரிக்கவும் இல்லை என்று இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அப்போது இருந்த சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் குரல்கள்  யாராலும் கேட்க முடியாத அளவிற்கு “தேசபக்தி பிரச்சாரத்தை” தீயாய்ப் பரப்பினார்கள்.  இதை முன்னின்று செய்த அமைப்புகள் மூன்று. ஒன்று இந்தோனேசிய இராணுவம். அந்நாட்டின் இராணுவத்திற்குள் அமெரிக்க உளவுப்பிரிவான சிஐஏ இரகசிய உளவாளிகள் மூலம் தன் வயப்படுத்திக் கொண்டிருந்த காலமது. அடுத்த அமைப்பு இஸ்லாமிய மஸ்யூமி கட்சி எனும் மத அடிப்படைவாதக் கட்சி.  அக்கட்சிக்கும் சிஐஏ தனது உதவிகளை செய்தது. மூன்றாவது இந்தோனேசியாவில் செயல்பட்டு வந்த உள்ளூர் ரௌடிக் குழுக்கள். அவர்களுக்கும் அனைத்து உதவிகளையும் இந்தோனேசிய இராணுவத்தின் மூலம் செய்தது சிஐஏ. இவ்வாறான இந்த மூன்று அமைப்புகள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்ட பொய் பிரச்சாரங்கள், “கம்யூனிஸ்டுகள் அந்நிய நாட்டு சக்திகள், கம்யூனிஸ்டுகள் சீன வந்தேறிகள் மொத்தத்தில் கம்யூனிஸ்டுகள் தேசவிரோதிகள்,” என்பதாகும். (இதே போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் கம்யூனிஸ்டுகள் மற்றும் முற்போக்காளர்களுக்கு எதிராக இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் மேற்கொள்ளப்படுவதை பொருத்திப் பார்க்க வும்) இவர்களிடமிருந்து இந்தோனேசியாவை பாதுகாக்க வேண்டும் என்றால் இவர்களை அழித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்ப தாகும். இவ்வாறான பொய் பிரச்சாரத்தின் மூலம் கொலை செய்யப்பட வேண்டிய கம்யூனிஸ்டு களின் பட்டியலை ஜகர்தாவில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் மூலமாக தயாரித்து  கொடுத்தது அமெரிக்காவின் சிஐஏ. அப்போதைய அமெரிக்க துணை அதிபரான ரிச்சர்ட் நிக்சன், “ஒரு ஜனநாயக அரசாங்கம் இந்தோனேசியாவிற்கு சிறப்பாக இருக்காது” என்று பகிரங்கமாகவே அறிவித்திருந்த காலமிது.  

10 லட்சம் கம்யூனிஸ்ட்டுகள் படுகொலை

இவ்வாறு கட்டவிழ்த்துவிடப்பட்ட “தேசபக்தி”  பொய்ப் பிரச்சாரத்தில் 10லட்சம் கம்யூனிஸ்டு கள் ஒரே ஆண்டில் படுகொலை செய்யப்பட் டார்கள். இன்றைக்கு பிரபலமான சுற்றுலாத்  தலமாக உள்ள பாலி பெரும் எண்ணிக்கையில் கம்யூனிஸ்டுகள் கொண்ட தீவாக இருந்தது.  பாலியில் மட்டும் 80ஆயிரம் கம்யூனிஸ்டுகள் கொலை செய்யப்பட்டார்கள். “பாசிசத்தின் கொடும் செயல், அது பொறுக்கிகளை அதி காரத்தில் அமரவைக்கும். கொஞ்சநாளில் அது சிவிலியன்களையும் பொறுக்கிகளாக்கும்.” இந்தோனேசியாவின் சிவிலியன்கள் இந்தப்  பொய்ப் பிரச்சாரத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களைப் போல செயல்படத் தொடங்கி னார்கள். சிவிலியன்களின் ஆதரவோடு உள்ளூர் ரௌடிகள் கம்யூனிஸ்டுகளின் தலைகளை வெட்டி, அதனுடன் இந்தோனேசிய வீதிகளில் ஊர்வலம் போனார்கள்.  எவ்வாறெல்லாம் கொலை செய்யலாம் என்று புதிய புதிய முறைகளில் கொலை செய்து குவித்தார்கள். எவ்வாறு அக்கொலைகள் நடைபெற்றது என்பது குறித்து சமீபத்தில் தி ஆக்ட் ஆப் கில்லிங் (The Act of Killing), தி  லுக் ஆப் சைலன்ஸ் (The Look of Silence) என்ற இரண்டு ஆவணப்படங்கள் வெளிவந்துள் ளன. சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அளவிற்கு இந்தோனேசியாவில் எங்கு திரும்பினாலும் குவிந்துகிடந்தன கம்யூனிஸ்டுகளின் கொலை செய்யப்பட்ட உடல்கள். இவ்வாறான கொலைகளைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்த ஜனநாயக அமைப்பு முறை முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தை தலைமை ஏற்று நடத்தி லட்சக்கணக்கான கம்யூனிஸ்டு களை கொலை செய்த இந்தோனேசிய இராணுவத் தளபதி சுகர்த்தோ 1967இல் அந்நாட்டின் அதிபராக முடிசூட்டிக் கொண்டார். 1998 வரை அவரே அந்நாட்டின் அதிபராக சர்வாதிகாரம் செலுத்தி வந்தார்.  அவரின் கம்யூனிச வெறுப்பரசியலை மேற்குலகம் உரமேற்றி வளர்த்தது.  

அமெரிக்க நிறுவனங்களுக்கு கனிம வளங்கள் தாரை வார்ப்பு

சுகர்த்தோ ஆட்சிக்கு வந்த பிறகு இந்தோனேசியாவில் இருந்த இயற்கை வளங்களான தங்கம் உள்ளிட்ட கனிமவளச் சுரங்கங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டன. கம்யூனிஸ்டுகளால் தேசவுடைமையாக்கப்பட்ட பெரு நிறுவனங்கள் மீண்டும் பன்னாட்டு பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தப் படுகொலைகளில் ஈடுபட்ட உள்ளூர் ரௌடிக் குழுக்களின் தலை வர்கள், மதவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும், பெரும் தொழிலதிபர் களாகவும் அதிகாரம் படைத்தவர்களாக உரு வாக்கப்பட்டார்கள். அவர்களை தேசபக்தர்கள் என்கிறது அந்நாட்டின் அதிகார வர்க்கம். அப்படியான ‘தேசபக்தர்’ ஒருவரால் ஜகர்தா வில் நடத்தப்படும் விடுதி ஒன்றிற்கு சென்றி ருந்தேன். அவ்விடுதி இந்தோனேசிய கிராமங் களிலிருந்து நகரங்களுக்கு பிழைப்புத் தேடி வரும் இளம் பெண்களை வைத்து நிர்வாண நடனங்களும், பாலியல் தொழிலும் நடத்தும் தேசபக்த செயலை செய்து கொண்டிருந்தது.  

பாலியல் சுற்றுலா நகரான பாலித் தீவு

அங்கு நடனமாடும் பெண்களிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் அவர்களின் துயர் மிகுந்த வாழ்க்கை அவர்கள் புன்ன கைக்கு பின்னால் நிழலாடுகிறது. கம்யூனிஸ்டு கள் அதிகம் வாழ்ந்து வந்த பாலி போன்ற இந்தோனேசியத் தீவுகள் வெளிநாட்டினர் அதிகம் வந்து போகும் பாலியல் சுற்றுலா நகரங்களாக இன்று உருமாற்றப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்தோனேசிய நாட்டின் இயற்கை வளங்களையும், மனித வளங்களை யும் மேற்குலக நாடுகள் சுரண்டும் வேட்டைக் காடாக உருவாக்கிவிட்டார்கள். எவ்வளவோ வளங்கள் குவிந்திருந்தும் அந்நாட்டு மக்கள் இன்று வேலையில்லா திண்டாட்டத்தாலும், வறுமையினாலும் வாடுகிறார்கள்.  இவ்வளவு படுகொலைகளை மீறி மீதமிருந்த சுமார் 20லட்சம் கம்யூனிஸ்டுகள் கிழக்கு ஜாவாவில் உள்ள தீவு ஒன்றில் சிறை வைக்கப்பட்டார்கள். அங்கேயே நோயினாலும், தண்டனைகளாலும் கணிசமானோர் மரணத்தை தழுவினார்கள். 1980களுக்குப் பிறகு எஞ்சியிருந்தவர்கள் படிப்படியாக விடு விக்கப்பட்டவர்கள். விடுவிக்கப்பட்ட கம்யூ னிஸ்டுகளுக்கு அந்நாட்டின் குடியுரிமை மறுக்கப்பட்டது. ரேஷன் உட்பட எந்த  உரிமைகளும் அவர்களுக்கு கிடையாது. நடைப்பிணமாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டிய சூழல் உருவானது.  உலகின் சில ஆயிரம் மக்களின் படுகொலை களைக் கூட ஐநா தனது இனப்படுகொலை பட்டியலில் வைத்துள்ளது. ஆனால் இந்தோ னேசியாவின் இத்தனை லட்சம் மக்களின் படுகொலைகளை எந்தக்கணக்கிலும் ஐநா பட்டியலிடவில்லை. இந்தோனேசியாவின் இந்தப் படுகொலைகள் குறித்து நமது வர லாற்று நூல்கள் குறிப்பாகக்கூட சொல்லித்தரு வதும் இல்லை. இவ்வாறான செயல்பாடுகளின் மூலமாக கம்யூனிசம் குறித்த அச்சம் இந்தோனேசிய மக்கள் மத்தியின் ஆழமாக வேறூன்ற வைத்தார்கள். அதற்குப் பிறகு இந்தோனேசியாவில் செயல்பட்டு வந்த தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் என்று எல்லா வர்க்க அமைப்புகளையும் தடை  செய்து மக்கள் மத்தியில் வர்க்க உணர்வு மேம்படாத வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.  

மீண்டெழும் தொழிலாளி வர்க்கம்

மக்களை திசை திருப்பி, வரலாற்றை திரித்து, லட்சக்கணக்கான படுகொலைகளை செய்து என்று எத்தனையோ கொடுஞ்செயல்களை இந்தோனேசிய ஆளும் வர்க்கம் கடந்த 60ஆண்டுகளாக செய்துவந்துள்ளது, “மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை” என்பதைப் போல,  அங்குள்ள உழைக்கும் மக்கள் தங்கள் தேவைகளுக்காக மீண்டும் எழுவதை இந்தோனேசிய ஆளும் வர்க்கத்தால் தற்போது தடுக்க முடியாமல் திணறத் தொடங்கியுள்ளது. சமீப ஆண்டுகளாக இந்தோனேசியாவில் மேதினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.  கடந்த மே தினத்தன்று இந்தோனேசிய தொழிலாளி வர்க்கம் இந்தோனேசிய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக மிகப்பெரும் இயக்கமொன்றை செங்கொடி ஏந்தி நாடு முழுவதும் நடத்தியுள்ளது. “முதலாளித்துவம், தனியார்மயம், தன்னலக்குழு, இராணுவவாதம் உள்ளிட்டவைகள் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானவைகள்” என்ற பதாகையை இந்தோ னேசிய உழைப்பாளி வர்க்கம் தூக்கிக் கொண்டு வீதிகளில் திரண்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் உழைக்கும் மக்களின் பங்கேற் போடு அமைதி மற்றும் எழுச்சிகரமான இயக்க மாக மே தினம் நடை பெற்றுள்ளது. ஜகர்தா உள்ளிட்ட சில இடங்களில் காவல்துறையோடு மோதல் போக்குகளும் ஏற்பட்டுள்ளன. தொழி லாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தோனேசிய ஆளும் வர்க்கம் தற்போது வந்துள்ளது.  

பண்பாட்டை பயன்படுத்தி...

வர்க்க உணர்வை வீழ்த்துவதற்கு வலது சாரிகள் பயன்படுத்தும் ஆயுதங்களில் பிரதான மான ஒன்று ‘தேசபக்தி’. நாம் மக்கள் பிரச்சனை களுக்கு குரல் கொடுக்கையில் நம்மை பார்த்து “ஆண்டி இந்தியன்ஸ்” என்று சொல்வார்கள். உழைக்கும் மக்களின் ஆயுதமான மார்க்சி யத்தை “அந்நிய நாட்டுச் சிந்தனை” என்று சொல்லி மக்களை திசை திருப்புவார்கள். “போர்  உழைக்கும் மக்களுக்கு எதிரானது. அதை அரசுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தவிர்க்க வேண்டும்” என்று நாம் போருக்கு எதிராகப் பேசினால் நம்மை தேசவிரோதி என்று முத்திரை குத்துவார்கள்.  “பண்பாடானது ஒரே நேரத்தில் வாளாகவும் கேடயமாகவும் இருக்கிறது” என்று சொல்வார் பேரா.கே.என்.பணிக்கர். தேசபக்தி உணர்வு என்பதும் ஒரு பண்பாட்டு நடவடிக்கை தான். ஆளும்வர்க்கம் அதை வாளாகப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முற்படும். அந்தச் சூழலில் உழைக்கும் வர்க்கம்  தனக்கான பண்பாடு மற்றும்  பொருளாதாரத்திலிருந்து அதே தேசபக்தியை எடுத்து தனக்கான கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். அதே கேடயத்தை வாளாக மாற்றி மக்களை பாதுகாக்க ஆளும் வர்க்கத்தை வீழ்த்தும் அரசியல் பணியையும் உழைக்கும் வர்க்கம் மேற்கொள்ள தயாராக வேண்டும்.